6. பிறநாடுகள் | |
52.புதிய ருஷியா ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி | |
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன் ஜாரெ னும்பே ரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும் சான்றோரும்;தருமற் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்; பொய்சூது தீமையெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந் தோங்கினவே அந்த நாட்டில் | |
2 | |
ADVERTISEMENTS
| |
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை; பிணிகள் பல வுண்டு; பொய்யைத் தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு; தூக்குண்டே இறப்ப துண்டு; முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே ஆவிகெட முடிவ துண்டு. | |
3 | |
இம்என்றால் சிறைவாசம்;ஏனென்றால் வனவாசம்,இவ்வா றங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில், அம்மைமனங் கனிந்திட்டாள்;அடிபரவி உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுநல் விழியாலே நோக்கினாள்;முடிந்தான் காலன். | |
4 | |
ADVERTISEMENTS
| |
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்;இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்வறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர்சட சடவென்று சரிந்திட்டார், புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே! | |
5 | |
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்றார்; இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ! | |
6 | |
ADVERTISEMENTS
| |
ராகம்-ஸைந்தவி | |
தாளம்-திஸ்ர சாப்பு |