தேசீய கீதங்கள்

6. பிறநாடுகள்

52.புதிய ருஷியா ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி

இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெ னும்பே ரிசைந்த பாவி
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்;தருமற் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய்சூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்
2
ADVERTISEMENTS

உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள் பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு;உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு;
தூக்குண்டே இறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு.
3

இம்என்றால் சிறைவாசம்;ஏனென்றால்
வனவாசம்,இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள்;அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்;முடிந்தான் காலன்.
4
ADVERTISEMENTS

இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்;இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்வறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர்சட சடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறை தன்னில்
திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!
5

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்
கிருதயுகம் எழுக மாதோ!
6
ADVERTISEMENTS
ராகம்-ஸைந்தவி
தாளம்-திஸ்ர சாப்பு