2. பாஞ்சாலி சபதம் | |
சபதச் சருக்கம் | |
சூதாடிநின்னையுதிட்டிரனே தோற்று விட்டான் வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய், சூதிலே வல்லான் சகுனி தொழில்வலியால், மாதரசே,நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான், மற்றிதனி லுன்னையொரு பந்தயமா வைத்ததே குற்றமென்று சொல்லுகிறாய்,கோமகளே,பண்டையுக வேத முனிவர் விதிப்படி,நி சொல்லுவது நீதமெனக் கூடும்;நெடுஞ்காலச் செய்தியது; ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில் பேணிவந்தார்;பின்னாளில் இஃது பெயர்ந்துபோய் இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால்,ஆடவருக் கொப்பில்லை மாதர்.ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்;தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம் முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன் நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு. செல்லு நெறியோர் செய்கையிங்கு பார்த்திடிலோ கல்லும் நடுங்கும் விலங்குகளும் கண்புதைக்கும். செய்கை அநீதியென்று தேர்ந்தாலும்,சாத்திரந்தான் வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால். ஆங்கவையும் நின்சார்பி லாகா வகையுரைத்தேன். தீங்கு தடுக்குந் திறமிலேன்’என்றந்த மேலோன் தலைகவிழ்ந்தான்.மெல்லியளுஞ் சொல்லுகிறாள்:- | |
ADVERTISEMENTS
| |
‘சாலநன்கு கூறினீர்! ஐயா! தருமநெறி பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின்,கூட்டமுற மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே, செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால் “தக்கது நீர் செய்தீர்;தருமத்துக் கிச்செய்கை ஒக்கும்”என்று,கூறி உகந்தனராம் சாத்திரிமார்! பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்! மாய முணராத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ? மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ? பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்! பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்!’என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அம்புபட்ட மான்போல் அழுது துடி துடித்தாள். வம்புமலர்க் கூந்தல் மண்மேற் புரண்டுவிழத் தேவி கரைந்திடுதல் கண்டே,சில மொழிகள் பாவிதுச் சாதனனும் பாங்கிழந்து கூறினான், வேறு ஆடை குலைவுற்று நிற்கிறாள்;-அவள் ஆவென் றழுது துடிக்கிறாள்-வெறும் மாயட நகர்த்த துச்சாதனன்-அவள் மைக்குழல் பற்றி யிழுக்கிறான்-இந்தப் பீடையை நோக்கினன் வீமனும்-கரை மீறி எழுந்தது வெஞ்சினம்;-துய் கூடித் ததருமனை நோக்கியே,-அவன் கூறிய வார்த்தைகள் கேட்டிரோ? | |
வேறு‘சூதர் மனைகளி லே-அண்ணே! தொண்டு மகளி ருண்டு, சூதிற் பணயமென் றே-அங்கோர் தொண்டச்சி போவ தில்லை. ‘ஏது கருதி வைத்தாய்?-அண்ணே யாரைப் பணயம் வைத்தாய்? மாதர் குல விளக்கை-அன்பே வாய்ந்த வடி வழகை. ‘பூமி யரச ரெல்லாங்-கண்டே போற்ற விளங்குகிறான், சாமி,புகழினுக்கே-வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன், ‘அவன் சுடர் மகளை-அண்ணே! ஆடி யிழந்து விட்டாய். தவறு செய்து விட்டாய்-அண்ணே! தருமங் கொன்று விட்டாய். ‘சோரத்திற் கொண்ட தில்லை;-அண்ணே! சூதிற் படைத்த தில்லை. வீரத்தினாற் படைத்தோம்;-வெம் பார் வெற்றியினாற் படைத்தோம்; ‘சக்கரவர்த்தி யென்றே-மேலாந் தன்மை படை திருந்தோம்; பொக்கென ஓர்கணத்தே-எல்லாம் போகத் தொலைத்து விட்டாய். ‘நாட்டை யெல்லாந் தொலைத்தாய்;-அண்ணே! நாங்கள் பொறுத் திருந்தோம். மீட்டும் எமை யடிமை-செய்தாய், மேலும் பொறுத் திருந்தோம் ‘துருபதன் மகளைத் -திட்டத் துய்ம னுடற் பிறப்பை, இரு பகடை யென்றாய்,-ஐயோ! இவர்க் கடிமை யென்றாய்! “இது பொறுப்ப தில்லை,-தம்பி! எரி தழல் கொண்டு வா. கதிரை வைத் திழந்தான்-அண்ணன் கையை எரித்திடுவோம். | |
ADVERTISEMENTS
| |
வேறுஎனவீமன் கசதேவ னிடத்தே சொன்னான் இதைக் கேட்டு வில்விஜயன் எதிர்த்துச் சொல்வான்; மனமாரச் சொன்னாயோ?வீமா!என்ன வார்த்தை சொன்னாய்?எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்ற மென்றாய்; சினமான தீ அறிவைப் புகைத்த லாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய். “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலுங காண்போம்;இன்று கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம். தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’என்றான். | |
அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான். அப்போது விகர்ணனெழுந்த தவைமுன் சொல்வான்; ‘பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன பேச்சதனை நான்கொள்ளேன்.பெண்டிர் தம்மை எண்ணமதில் விலங்கெனவே கணவ ரெண்ணி ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன், வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள் வழங்குவதிந் நெறி என்றான்;வழுவே சொன்னான். ‘எந்தையர்தம் மனைவியரை விற்ப துண்டோ? இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற விந்தையைநீர் கேட்ட துண்டோ’விலைமாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக் காரர் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்! சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில் இந்தவிதஞ் செய்வதில்லை,சூதர் வீட்டில் ஏவற்பெண பணயமில்லை என்றுங் கேட்டோம். “தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த் தாரமெது?வீடேது?தாத னான பின்னையுமோர் உடைமை உண்டோ? என்று நம்மைப் பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால். மன்னர்களே!களிப்பதுதான் சூதென் றாலும் மனுநீதி துறந்திங்கே வலிய பாவந் தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ? தாத்தனே நீதிஇது தகுமோ?’என்றான். இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்; எழுந்திட்டார் சிலவேந்தர்;இரைச்ச லிட்டார், ‘ஓவ்வாது சகுனிசெயுங் கொடுமை’என்பார்; ஒருநாளும் உலகிதனை மறக்கா’தென்பார்; ‘எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்; ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா, செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச் செருக்களத்தே தீருமடா பழியிஃ’தென்பார். | |
ADVERTISEMENTS
| |
வேறு விகருணன் சொல்லைக் கேட்டு வில்லிசைக் கர்ணன் சொல்வான்:- ‘தகுமடா சிறியாய் நின்சொல் தாரணி வேந்தர் யாரும் புகுவது நன்றென் றெண்ணி வாய்புதைத் திருந்தார் நீ தான் மிகு முறை சொல்லி விட்டாய். விரகிலாய்! புலனு மில்லாய்! ‘பெண்ணிவள் தூண்ட லெண்ணிப் பசுமையால் பிதற்று கின்றாய்; எண்ணிலா துரைக்க லுற்றாய்; இவளைநாம் வென்ற தாலே நண்ணிடும் பாவ மென்றாய். நாணிலாய்!பொறையு மில்லாய்! கண்ணிய நிலைமை யோராய்; நீதிநீ காண்ப துண்டோ? ‘மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கங்கீ ழடியார்க் கில்லை சீரிய மகளு மல்லள்; ஐவரைக் கலந்த தேவி யாரடா பணியாள்!வாராய்; பாண்டவர் மார்பி லேந்தும் சீரையுங் களைவாய்;தையல் சேலையுங் களைவாய்’என்றான். இவ்வுரை கேட்டா ரைவர்; பணிமக்க ளேவா முன்னர் தெவ்வர்கண் டஞ்சு மார்பைத் திறந்தவர்,துணியைப் போட்டார். நவ்வியைப் போன்ற கண்ணாள், ஞான சுந்தரி,பாஞ்சாலி ‘எவ்வழி உய்வோ’மென்றே தியங்கினாள், இணைக்கை கோத்தாள். |