2. பாஞ்சாலி சபதம் | |
திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம் 57. விதுரன் சொல்வது | |
துரியோ தனன் இச் சுடுசொற்கள் கூறிடவும் பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு, ‘மூட மகனே! மொழியொணா வார்த்தையினைக் கேடுவரல் அறியாய்,கீழ்மையினாற் சொல்லிவிட்டாய், புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல் பிள்ளைத் தவளை பெரம்பாம்பை மோதுதல்போல், ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய், தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகிறாய்; நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்லுகிறேன்; என்னுடைய சொல், வேறு எவர்பொருட்டும் இல்லையடா? பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார், மாண்டு தலைமேல், மகனே!கிடப்பாய் நீ, தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா? முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ? நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான் பொல்லாத வேனன்,புழுவைப்போல் மாய்ந்திட்டான். நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ? மஞ்சனே,அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ? கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்து விடும்; பட்டார்தம் நெஞ்சில் பலநாள் அகலாது வெந்நரகு சேர்த்துவிடும்,வித்தை தடுத்துவிடும், மன்னவனே,நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல். சொல்லிவிட்டேன்; பின்னொருகால் சொல்லேன்,கவுரவர்காள்! புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது. பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்! வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும். பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம். மீண்டவர்க்கே ஈந்து விட்டு,விநயமுடன் “ஆண்டவரே!யாங்கள் அறியாமை யால்செய்த நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர்” என்றுரைத்து, மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர் குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல், மாபா ரதப்போர் வரும்;நீர் அழிந்திடுவீர், பூபால ரே’என்றப் புண்ணியனும் கூறினான். சொல்லிதனைக் கேட்டுந் துரியோதன மூடன், வல்லிடிபோல் ‘சீச்சீ! மடையா,கெடுக நீ எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே, இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொள்ளார், யாரடா,தேர்ப்பாகன்!நீபோய்க் கணமிரண்டில் “பாரதர்க்கு வேந்தன் பணித்தான்’ எனக்கூறிப் பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே ஈண்டழைத்து வாஎன்’ றியம்பினான்.ஆங்கே தேர்ப் பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில் சோகம் ததும்பித் துடித்தகுரலுடனே, ‘அம்மனே போற்றி! அறங்காப்பாய்,தாள் போற்றி! வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார் மாமன் சகுனியொடு மாயச்சூ தாடியதில், பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத் தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார். சாற்றிப் பணயமெனத் தாயேஉனை வைத்தார். சொல்லவுமே நாவு துணியவில்லை;தோற்றிட்டார் எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே, நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்’ என்ன உரைத்திடலும்,‘யார்சொன்ன வார்த்தையடா! சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து மாதர் வருதல் மரபோடா? யார் பணியால் என்னை அழைக்கின்றாய்?’என்றாள் அதற்கவனும். ‘மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்.’என்றிட்டான். ‘நல்லது;நீ சென்று நடந்தகதை கேட்டுவா வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம் என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா? சென்று சபையில்இச் செய்தி தெரிந்து வா’ என்றவளுங் கூறி இவன்போ யியபின்னர், தன்னந் தனியே தவிக்கு மனத்தாளாய் வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய. உள்ளத்தை அச்சம் உலைவுறுத்தப் பேய்கண்ட பிள்ளையென வீற்றிருந்தாள் பின்னந்தத் தேர்ப்பாகன் மன்னன் சபைசென்று,வாள் வேந்தே! ஆங்கந்தப் பொன்னரசி தாள்பணிந்து போதருவீர்”என்றிட்டேன். என்னை முதல்வைத் திழந்தபின்பு தன்னைஎன் மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற பின்னரெனைத் தோற்றாரா?”என்றேநும் பேரவையை மின்னற் கொடியார் வினவிரத் தாம் பணித்தார் வந்துவிட்டேன்’என்றுரைத்தான் மாண்புயர்ந்த பாண்டவர்தாம் நொந்துபோ யொன்றும் நுவலா திருந்துவிட்டார். மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்ன ரெலாம் முற்றும் உரையிழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். | |
ADVERTISEMENTS
| |
வேறு உள்ளந் துடித்துச் சுயோ தனன்-சினம் ஓங்கி வெறிகொண்டு சொல்லு வான்;-‘அட! பிள்ளைக் கதைகள் விரிக்கி றாய்.-என்றன் பெற்றி யறிந்திலை போலும்,நீ!-அந்தக் கள்ளக் கரிய விழியி னாள்-அவள் கல்லிகள் கொண்டிங்கு வந்த னை!-அவள் கிள்ளை மொழியின் நலத்தை யே-இங்குக் கேட்க விரும்புமென் னுள்ள மே ‘வேண்டிய கேள்விகள் கேட்க லாம்.-சொல்ல வேண்டிய வார்த்தைகள் சொல்ல லாம்-மன்னர் நீண்ட பெருஞ்சபை தன்னி லே-அவள் நேரிடவே வந்த பின்பு தான்,-சிறு கூண்டிற் பறவையு மல்ல ளே!-ஐவர் கூட்டு மனைவிக்கு நாண மே-சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யு முன்-அந்த மொய்குழ லாளைஇங் கிட்டு வா. ‘மன்னன் அழைத்தனன் என்று நீ- சொல்ல மாறி யவளொன்று சொல்வ தோ?-உன்னைச் சின்னமுறச் செய்குவே னடா!-கணஞ் சென்றவளைக் கொணர்வாய்’ என்றான்-அவன் சொன்ன மொழியினைப் பாகன் போய்-அந்தத் தோகைமுன் கூறி வணங்கி னன்-அவள் இன்னல் விளைந்திவை கூறு வாள்-‘தம்பி, என்றனை வீணில் அழைப்ப தேன்? | |
நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின்-என்னை நல்கும் உரிமை அவர்க்கில்லை-புலைத் தாயத்தி லேவிலைப் பட்டபின்-என்ன சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்?-அவர் தாயத்தி லேவிலைப் பட்டவர்;-புவி தாங்குந் துருபதன் கன்னி நான்-நிலை சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால்,-பின்பு தார முடைமை அவர்க்குண் டோ? ‘கௌரவ வேந்தர் சபைதன் னில்-அறங் கண்டவர் யாவரும் இல்லை யோ?-மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்ன ரே-அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்கு மோ?-புகழ் ஒவ்வுற வாய்ந்த குருக்க ளும்-கல்வி ஒங்கிய மன்னருஞ் சூதி லே-செல்வம் வவ்வுறத் தாங்கண் டிருந்த னர்!-என்றன் மான மழிவதும் காண்ப ரோ? ‘இன்பமுந் துன்பமும் பூமியின்-மிசை யார்க்கும் வருவது கண்ட னம்;-எனில் மன்பதை காக்கும் அரசர் தாம்-அற மாட்சியைக் கொன்று களிப்ப ரோ?-அவர் முன்பென் வினாவினை மீட்டும் போய்ச்-சொல்லி முற்றுந் தெளிவுறக் கேட்டு வா’ என் றந்தப் பாண்டவர் தேவி யும்-சொல்ல, என்செய்வன் ஏழையப் பாகனே?-என்னைக் கொன்றுவிட் டாலும் பெரிதில்லை-இவள் கூறும் வினாவிற் கவர் விடை-தரி னன்றி இவளை மறுமுறை -வந்து அழைத்திட நானங் கிசைந்திடேன்’-(என) நன்று மனத்திடைக் கொண்டவன் சபை நண்ணி நிகழ்ந்தது கூறி னான். ‘மாத விடாயி லிருக்கி றாள்-அந்த மாதர சென்பதும் கூறினான்-கெட்ட பாதகன் நெஞ்சம் இளகி டான்-நின்ற பாண்டவர் தம்முகம் நோக்கி னான்-அவர் பேதுற்று நிற்பது கண்ட னன்-மற்றும் பேரவை தன்னில் ஒருவரம-இவன் தீதுற்ற சிந்தை தடுக்க வே-உள்ளத் திண்மையி லாதங் கிருந்த னர். பாகனை மீட்டுஞ் சினத்துடன்-அவன் பார்த்திடி போலுரை செய்கின் றான்;-‘பின்னும் ஏகி நமதுளங் கூற டா-அவள் ஏழு கணத்தில் வரச் செய் வாய்?-உன்னைச் சாக மிதித்துடு வேன !’-என்று தார்மன்னன் சொல்லிடப் பாக னும்-மன்னன் வேகந் தனைப்பொருள் செய்திடான்-அங்கு வீற்றிருந் தோர்தமை நோக்கியே. “சீறும் அரசனுக் கேழை யேன்-பிழை செய்த துண்டோ?அங்குத் தேவி யார்-தமை நூறு தரஞ்சென் றழைப்பி னும்,-அவர் நுங்களைக் கேட்கத் திருப்பு வார்;-அவர் ஆறுதல் கொள்ள ஒருமொழி-சொல்லில்‘ அக்கண மேசென் றழைக்கி றேன்;-மன்னன் கூறும் பணிசெய வல்லன் யான்;-அந்தக் கோதை வராவிடில் என்செய் வேன்?’ | |
ADVERTISEMENTS
| |
இவ்வுரை கேட்டதுச் சாதனன்-அண்ணன் இச்சையை மெச்சி எழுந்தனன்-இவன் செவ்வி சிறிது புகலு வோம்;-இவன் தீமையில் அண்ணனை வென்றவன்;-கல்வி எவ்வள னேனுமி லாதவன்;-கள்ளும் ஈரக் கறியும் விரும்பு வோன்;-பிற தெவ்வர் இவன்றனை அங்சுவார்;-தன்னைச் சேர்ந்தவர் பேயென் றொதுங்கு வார்; புத்தி விவேக மில்லாத வன்;-புலி போல உடல்வலி கொண்டவன்;-கரை தத்தி வழியுஞ் செருக்கி னால-கள்ளின் சார்பின் றியேவெறி சான்ற வன்;-அவ சக்தி வழிபற்றி நின்ற வன்;-சிவ சக்தி நெறிஉண ராத வன்;-இன்பம் நத்தி மறங்கள் இழைப்ப வன்;-என்றும் நல்லவர் கேண்மை விலக்கி னோன்; அண்ண னொருவனை யன்றி யே-புவி அத்தனைக் குந்தலை யாயி னோம்-என்னும் எண்ணந் தனதிடைக் கொண்டவன்;-அண்ணன் ஏது சொன்னாலும் மறுத்தி டான்;-அருட் கண்ணழி வெய்திய பாத கன்;.அந்தக் காரிகை தன்னை அழைத்து வா’-என் றவ் அண்ண னுரைத்திடல் கேட்ட னன்;-நல்ல தாமென் றுறுமி எழுந்த னன். பாண்டவர் தேவி யிருந்த தோர்-மணிப் பைங்கதிர் மாளிகை சார்நத் னன்;-அங்கு நீண்ட துயரில் குலைந்துபோய்-நின்ற நேரிழை மாதினைக் கண்ட னன்;-அவள் தீண்டலை யெண்ணி ஒதுங்கி னாள்;-‘அடி! செல்வ தெங்கே’யென் றிரைந்திட்டான்;-‘இவன் ஆண்டகை யற்ற புலைய’னென்று -அவள் அச்ச மிலா தெதிர் நோக்கி யே | |
சம்வாதம்‘தேவர் புவிமிசைப் பாண்ட வர்;-அவர் தேவி,துருபதன் கன்னி நான்;-இதை யாவரும் இற்றை வரையி னும்,-தம்பி, என்முன் மறந்தவ ரில்லை காண்;-தம்பி, காவ லிழந்த மதிகொண் டாய்;-இங்குக் கட்டுத் தவறி மொழி கிறாய்;-தம்பி நீ வந்த செய்தி விரைவி லே-சொல்லி நீங்குக’என்றனள் பெண்கொடி. ‘பாண்டவர் தேவியு மல்லைநீ;-புகழ்ப் பாஞ்சாலத் தான்மக ளல்லை நீ;-புவி யாண்டருள் வேந்தர் தலைவ னாம்-எங்கள் அண்ணனுக் கேயடி மைச்சிநீ;-மன்னர் நீண்ட சபைதனிற் சூதிலே-எங்கள் நேசச் சகுனியோ டாடியங்கு-உன்னைத் தூண்டும் பணய மெனவைத் தான்-இன்று தோற்று விட்டான் தருமேந்திரன். ‘ஆடி விலைப்பட்ட தாதி நீ;-உன்னை ஆள்பவன் அண்ணன் சுயோத னன்;-’மன்னர் கூடி யிருக்குஞ் சபையிலே-உன்னைக் கூட்டி வரு’கென்று மன்ன வன் சொல்ல ஓடி வந்தேனிது செய்திகாண்;-இனி ஒன்றுஞ் சொலா தென்னோ டேகுவாய்-அந்தப் பேடி மகனொரு பாகன் பாற்-சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்க வே’ வேறு துச்சா தனனிதனைச் சொல்லினான்,பாஞ்சாலி;- ‘அச்சா,கேள் மாதவிலக் காதலா லோராடை தன்னி லிருக்கின்றேன்.தார்வேந்தர் பொற்சபைமுன் என்னை யழைத்தல் இயல்பில்லை,அன்றியுமே, சோதரர்தந் தேவிதனைச் சூதில் வசமாக்கி, ஆதரவு நீக்கி,அருமை குலைத்திடுதல், மன்னர் குலத்து மரபோகாண்?அண்ணன்பால் என்னிலைமை கூறிடுவாய்,ஏகுக நீ’என்றிட்டாள். கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான், ‘ஐயகோ’வென்றே யலறி யுணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான்.வழிநெடுக.மொய்த்தவராய். என்ன கொடுமை யிது’வென்று பார்த்திருந்தார், ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ? வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன் தன்னை மிதத்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல், நெட்டை மரங்களென நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச் சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க் கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே கூடுதலும் அங்கேபோய்க் கோ’வென்றலறினாள். | |
ADVERTISEMENTS
| |
விம்மி யழுதாள்;-‘விதியோ கணவரே! அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த்தீமுன் வேண்டி மணஞ்செய்து பாதகர்முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?’ என்றாள்,விஜயனுடன் ஏறுதிறல் வீமனுமே குன்றா மணித்தோள் குறிப்புடனே நோக்கினார், தருமனும்மற் றாங்கே தலைகுனிந்து நின்றிட்டான் பொருமி யவள்பின்னும் புலம்புவாள்:-‘வான் சபையில் கேள்விபல வுடையர் கேடிலா நல்லிசையோர். வேள்வி தவங்கள் மிகப் புரிந்த வேதியர்கள் மேலோ ரிருக்கின்றார்,வெஞ்சினமேன் கொள்கிலரோ? வேலோ ரெனையுடைய வேந்தர் பிணிப்புண்டார், இங்கிவர்மேற் குற்றம் இயம்ப வழியில்லை, மங்கியதோர் புன்மதியாய்!மன்னர் சபைதனிலே என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய், நின்னை யெவரும்“நிறுத் தடா”என்பதிலர், என்சேய்கேன்?’என்றே இரைந்தழுதாள்,பாண்டவரை மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள். மற்றவர்தாம் முன்போ வாயிழந்து சீர்குன்றிப் பற்றைகள்போல் நிற்பதனைப் பார்த்து,வெறிகொண்டு ‘தாதியடி தாதி;’யெனத் துச்சாதனன் அவளைத் தீதுரைகள் கூறினான் கர்ணன் சிரித்திட்டான்; சகுனி புகழ்ந்தான்.சபையினோர் வீற்றிருந்தார்! தகுதியுயர் வீட்டுமனுஞ் சொல்லுகிறான்;தையலே |