4. சான்றோர் | |
31. சுப்பராம தீட்சிதர் | |
அகவல் கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும் புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும் மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும் வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப. ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும் ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும் மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்; தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில் மேவிய குரக்கர் விளங்குதல் போல. நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில் சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்; இவரிடை சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும், அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும், சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும், போற்றதற் குரிய புனிதவான் குலத்தில் நாரத முனிவன் நமர்மிசை யரளால் பாரத நாட்டில் பழமாண் புறுகென மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன, நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான் தோமறு சுப்ப ராமனற் பெயரோன் நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான் இன்னான் தானும் எமையகன் றேகினன்; என்னே நம்மவர் இயற்றிய பாவம்! இனியிவ னனையரை எந்நாட் காண்போம்? கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம் அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்! நொந்தோ பயனிலை நுவல யா துளதே? விருத்தம் கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப நாடனுடன் கவிதை போயிற்று உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம் அகன்றதென உரைப்பர் ஆன்றோர்; என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப ராமனெனும் இணையி லாவிற் பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும் அகன் றதெனப் பகர லாமே. கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில் பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும் மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை மாற்றுதற்கு வந்த ஞான நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி நெய்யகல நின்ற தட்டின் உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ? மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர் தங்களையும் வணங்க லாதேன் தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்; உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம் எனக்கருதி வந்தேன்;அந்தோ! இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ் வெளியன்மனம் என்ப டாதோ? | |
ADVERTISEMENTS
| |
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்? கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா தப்புலவன் குறைவில் கீர்த்தி பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல் பேருவகை படைக் கின்றீரே? அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும், பன்னியசீர் மகாமகோ பாத்தியா யப்பதவி பரிவுன் ஈந்து பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா தன்றனக்குப் புகழ்செய் வாரேல், முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழிய லாமோ? ‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே. | |
1 ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் சீட்டுக் கவிகள். பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே ஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்; காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின் நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ? விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா! பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால், அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாக அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்! சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால் எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? எட்டயபுரம் 1919-ம் வருடம் மே சுப்பிரமணிய பாரதி மாதம் 2உ 2 ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன், தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க டேசுரெட்ட சிங்கன் காண்க. வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி மறவாத மனத்தான்,சக்தி தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய பாரதிதான் சமைத்த தூக்கு. மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்த மன்னரிலை யென்று மாந்தர் இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம் புனைந்த பொழு திரிந்த தன்றே! சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு, சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக் கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல் தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே! புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழி லேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசையென்னாற் கழிந்த தன்றே! “சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது, சொற்புதிது சோதி மிக்க நவகவிதை,எந்நாளும் அழியாத மகாகவிதை”என்று நன்கு. பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் புலவோரும் பிறரு மாங்கே விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர் தாமுமிக வியந்து கூறிப் பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப் போற்றுகின்றார்;பாரோ ரேத்துந் தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா! நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். வேறு வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென் கவிதையினை வேந்த னே!நின் நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு நன்கு போற்றி, ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள் ஜதிபல் லக்கு, வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி வாழ்க நீயே! எட்டயபுரம் 1919-ம் வருடம் சுப்பிரமணிய பாரதி மே மாதம் 2ம் தேதி | |
ADVERTISEMENTS
| |
மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரைப் போல் மடிவில் லாமல் திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய உபாயமிங்கு செப்பக் கேளீர்! நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச் செய்கையெலாம் நடத்தும் வீறாய்த் திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு பரம்பொருளை அகத்தில் சேர்த்து, செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம் அதன்நினைவு,தெய்வ மேநாம் உய்கையுற நாமாகி நமக்குள்ளே யொளிர்வ தென உறுதி கொண்டு, யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல், வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம், ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும் வாளாலே அறுத்தத் தள்ளி. எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில் வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர், தப்பாதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவார்;சதுர்வே தங்கள் மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்கக் கூறும் துப்பான மதத்தினையே ஹிந்துமத மெனப்புவியோர் சொல்லு வாரே. அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த் தனைச்சாரும் அன்பர்க் கிங்கு பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம் ஹிந்துமதப் பெற்றி தன்னைக் கருதியதன் சொற்படி யிங் கொழுகாத மக்களெலாம் கவலை யென்னும் ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித் தழிகின்றார் ஓய்வி லாமே. இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந் தனையுலகில் இசைக்க வல்ல, புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப் பாரறியப் புகட்டும் வண்ணம்; தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற் காரைக்குடியூர் தனிலே சால உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார். உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார், அன்பொன்றே உறுதி யென்பார், வண்மையே குலதர்ம மெனக்கொண்டார் தொண்டொன்றே வழியாக் கண்டார்; ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்; அவ்வன்பின் ஊற்றத்தாலே திண்மையுறும் ஹிந்துமத அபிமான சங்கமொன்று சேர்த்திட்டாரே. பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர் பிரசங்கம் பண்ணு வித்தும் நலமுடைய கலாசாலை புத்தகசா லைபலவும் நாட்டி யுந்தம் குலமுயர நகருயர நாடுயர உழைக்கின்றார்,கோடி மேன்மை நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே! | |
வருக செல்வ!வாழ்கமன் நீயே! வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர் பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த நற்றவக் புதல்வ! நல்வர வுனதே! மேதக நீயும்நின் காதலங் கிளியும் என்றனைக் காணுமா றித்தனை காதம் வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர் நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில. போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்? மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர், அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர் அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே, பாரத தேவி பழமைபோல் திருவருள் பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன. யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத் துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும், பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும், எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என் பாலரின் மீது படுதலுற் றனவே. ஆயினும் என்னை?ஆயிரங் கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. நல்குர வாதி நவமாம் தொல்லைகள் ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால் எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால் நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல. நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம் பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே! என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது, செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின் இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க! வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! மற்றென் சேய்கள் வாழிய! வாழிய! | |
ADVERTISEMENTS
| |
“பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே”. -பட்டினத்துப் பிள்ளைமுன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்; தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் சரத மன்றெனல் யானும் அறிகுவேன்; பாழ்க டந்த பரநிலை யென்றவர் பகரும் அநநிலை பாத்திலன் பார்மிசை ஊழ்க டந்து வருவதும் ஒன்றுண்டோ? உண்மை தன்னிலோர் பாதி யுணர்ந்திட்டேன். மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்திலேன்; சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே. உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கியி டர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்;இதனிடை சிலதி னங்க்ள் உயிர்க்கமு தாகியே செப்பு தற்கரி தாகம யக்குமால்; திலத வாணுத லார்தரு மையலாந் தெய்வி கக்கன வன்னது வாழ்கவே. ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும் என்னொ டொத்த சிறியர் இருப்பரால்; வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான் வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன். தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த் தோழ மைபிறி தின்றி வருந்தினேன். பிள்ளைக் காதல் அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலில் எவ்வணம் சொல்லுகேன்? சொன்னந தீங்கன வங்குத் துயிலிடைத் தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்; மென்ன டைக்கனி யின்சொற் கருவிழி மேனி யெங்கும் நறுமலர் வீசிய கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக் கண்டு காதல் வெறியிற் கலந்தனன். ‘ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக் கோது காதைச சகுந்தலை யொத்தனள்’ என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால் என்செய் கேன்? பழி யென்மிசை யுண்டுகொல்? அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்ட வல்லரே? முன்பு மாமுனி வோர்தமை வென்றவில் முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே? வயது முற்றிய பின்னுறு காதலே மாசு டுடைத்தது தெய்விக மன்றுகாண்; இயலு புன்மை யுடலினுக் கின்பெனும் எண்ண முஞ்சிறி தேற்றதக் காதலாம்; நயமி குந்தனி மாதை மானணம் நண்ணு பாலர் த்மக்குரித் தாமன்றோ? கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான் காம னம்புகள் என்னுயிர் கண்டவே. கனகன் மைந்தன் குமர குருபரன் கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற் றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம் எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர் மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன் மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்; முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்; மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே. நீரெ டுத்து வருதற் கவன்மணி நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப் போரெ டுத்து வருமதன் முன்செலப் போகும் வேளை யதற்குக் தினந்தொறும் வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர் வீழ்ந்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம் சீரெ டுத்த புலையுயிர்ச் சாரர்கள் தேச பத்ர் வரனைக் காத்தல்போல், காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும் கண்கள் பின்னழ கார்ந்து களித்திட யாத்த தேருரு ளைப்படு மேழைதான் யாண்டு தேர்செலு மாங்கிழு புற்றெனக் கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ் கொண்டு நாட்கள் பலகழீத் திட்டனன்; பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன். புலங்க ளோடு கரணமும் ஆவியும் போந்து நின்ற விருப்புடன் மானிடன் நலங்க ளேது விரும்புவன் அங்கவை நண்ணு றப்பெ றல் திண்ணம தாமென, இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்; யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன் விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம் விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே. சூழு மாய வுலகினிற் காணுறுந் தோற்றம் யாவையும் மானத மாகுமால்; ஆழு நெங்சகத் தாசையின் றுள்ளதேல், அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும். தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல் தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர், வீழு மோரிடை யூற்றினக் கஞ்சுவோர், விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர், வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர், சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர் சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர் மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர் மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்; கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண். கன்னி மீதுறு காதலின் ஏழையேன் கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்? பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின் பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ? முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர் முடவன் கால்கள் முழுமைகொண் டாலென என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ? என்ன டத்தவள் இங்கிதம் பூண்டதே! காத லென்பதும் ஓர்வயின் நிற்குமேல், கடலில் வந்த கடுவினை யொக்குமால்; ஏத மின்றி யிருபுடைத் தாமெனில் இன்னமிர்தும் இணைசொல லாகுமோ? ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர் உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர் மாத ரார்மிசை தாமுறுங் காதலை மற்ற வர்தரப் பெற்றிடு மாந்தரே; மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர், கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால், காட்சி யற்ற கவினுறு நீள்விழி. பொய்க்கி ளைத்து வருந்திய மெய்யரோ, பொன்ன னாரருள் பூண்டில ராமெனில் கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துய்க் காத லஃது கருதவுந் தீயதால். தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல் தீய கைக்கிளை யானெவன் பாடுதல்? ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான் அன்பெ னக்கங் களித்திட லாயினள்; பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோம், பண்டைத் தேவயுகத்து மனிதர்போல், காவல் கட்டு விதிவழக் கென்றிடுங் கயவர் செய்திக ளேதும்,அறிந்திலோம். கான கத்தில் இரண்டு பறவைகள் காத லுற்றது போலவும்,ஆங்ஙனே வான கத்தில் இயக்க ரியக்கியர் மையல் கொண்டு மயங்குதல் போலவும், ஊன கத்த துவட்டுறும் அன்புதான் ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே தேன கத்த மணிமொழி யாளொடு தெவ் நாட்கள் சிலகழித் தேனரோ? ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன் ஆலயத்தொரு மண்டபந்த தன்னில்யான் சோதி மானொடு தன்னந் தனியனாய்ச் கொற்க ளாடி யிருப்ப, மற் றங்கவள் பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன் பங்க யக்கையில் மைகொணர்ந்தே,‘ஒரு சேதி!‘நெற்றியில் பொட்டுவைப் பேன்’என்றாள்; திலத மிட்டனள்; செய்கை யழிந்தனன். என்னை யின்றெனக் கைந்து பிராயத்தில் ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை முன்னை யீன்றவன்,செந்தமிழ்ச் செய்யுளால் மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன், அன்ன வன்தவப் பூசனை தீர்ந்தபின் அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான் பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும் பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண். ஆங்கிலப் பயிற்சி நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன் நேரு மாறெனை எந்தை பணித்தனன்; புல்லை யுண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம் நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடு விப்பது போலவும்,எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை. நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள், நாயென னத்திரி யொற்றர் உணவினைப் பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும் பேடி யர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர், கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங். கலைப யில்கென என்னை விடுத்தனன். அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ் அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ? கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்; வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்; வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார் துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள் சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளி தாசன் கவிதைபு னைந்ததும், உம்பர் வானத்துக் கோளை மீனையும் ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும், நம்ப ருந்திற லோடொரு பாணினி ஞால மீதில் இலக்கணங் கண்டதும், இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின் இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும், தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும், பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும், பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார் பிழைப டாது புவித்தலங் காத்ததும், வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். அன்ன யாவும் அறிந்திலர் பாரதத் தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்; முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும் மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார் பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்; என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன் இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! சூதி லாத வுளத்தினன் எந்தைதான் சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே ஏதி லார்தருங் கல்விப் படுகுழி ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம் தீதி யன்ற மயக்கமும் ஐயமும் செய்கை யாவினு மேயசி ரத்தையும் வாதும் பொய்மையும் என்றவி லங்கினம் வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன் ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக் காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய பொய்ய ருக்கிது கூறுவன் கேட்பிரேல்; பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான் மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட வீறி ழந்தென துள்ளம்நொய் தாகிட ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென் அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால். செலவு தந்தைக் கோ ராயிரஞ் சென்றது; தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன; நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்! சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந் தேவி பாரதத் தன்னை யருளினும் அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான் அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே! மணம் நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை நிகழ்த்த நாநனி கூசும தன்றியே எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர் யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்; அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்; அம்ம! மாக்கள் மணமெனுஞ் செய்தியே. வினைத்தொ டர்களில் மானனட வாழ்க்கையுள் மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ! வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்; மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்; நாடுங் காலொர் மணமற்ற செய்கையை நல்ல தோர்மண மாமென நாட்டுவார், கூடு மாயிற் பிரம சரியங்கொள்; கூடு கின்றில தென்னிற் பிழைகள்செய்து ஈட ழிந்து நரக வழிச்செல்வாய்; யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண். வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல் பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து பார்க்கி னும்பெறல் சால வரிதுகாண், புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப் புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ? அசுத்தர் சொல்வது கேட்கலிர்,காளையீர்! ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின். வேறு தேயத் தெவரெது செய்யினும் வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில் ஊற ழிந்து பிணமென வாழுமிவ் வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம், கூறு மெந்தத் துயர்கள் விளையினும் கோடி மக்கள் பழிவந்து சூழினும் நீறு பட்டவிப் பாழ்ச்செய்ல மட்டினம் நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே. பால ருந்து மதலையர் தம்மையே பாத கக்கொடும் பாதகப் பாதகர் மூலத் தோடுகு லங்கெடல் நாடிய மூட மூடநிர் மூடப் புலையர்தாம், கோல மாக மணத்திடைக் கூட்டுமிக் கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும் சால வின்னு மோராயிரம் ஆண்டிவர் தாத ராகி அழிகெனத் தோன்றுமே! ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்; ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள் எந்தை வந்து மணம்புரி வித்தனன். தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன் செயலெ திர்க்குந் திறனில் னாயினேன். ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன் உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன் மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன் மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான் நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்; நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்; முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால் மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன் கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன் காத லொன்று கடமையொன் றாயின! மதனன் செய்யும் மயக்க மொருவயின்; மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்; இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக் கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்? எதனி லேனுங் கடமை விளையுமேல் எத்து யர்கள் உன்றுமற் றென்செய்தும் அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று அரம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன். சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரந் தாலி மணியெலாம் யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது யாது தர்ம முறையெனல் காட்டிலர், தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்; செய்து மற்றவை ஞான நெறியென்பர்; மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால் மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே? தந்தை வறுமையெய்திடல் ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர் எய்திய நின்றனன்,தீய வறுமையான்; ஓங்கி நின்ற பெருங்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்; பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்; வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும் வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ? பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய பாழ டைந்த கலியுக மாதலால், வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வ தொன்றையே மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்; ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம் ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்; நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன். தீய மாய வுலகிடை யொன்றினில் சிந்தை செய்து விடாயுறுங் காலதை வாய டங்க மென்மேலும் பருகினும் மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்; நேய முற்றது வந்து மிகமிக நித்த லும்மதற் காசை வளருமால் காய முள்ள வரையுங் கிடைப்பினும் கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே. ‘ஆசைக் கோரள வில்லை விடயத்துள் ஆழ்ந்த பின்னங் கமைதியுண்டாமென மோசம் போகலிர்’என்றிடித் தோதிய மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம் தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான் திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும் நாசக் காசினில் ஆசையை நாட்டினன் நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன். பொருட் பெருமை “பொருளி லார்கிலை யிவ்வுல” கென் றநம் பிலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்; பொருளி லார்க்கின மில்லை துணையிலை, பொழுதே லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால், பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்; போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும் மருளர் தம்மிசை யேபழி கூறுவன்; மாமகட் கிங்கொர் ஊன முரைத்திலன். அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல் லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்; பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட பீழை எத்தனை கோடி!நினைக்கவும் திறன ழிந்தென் மனமுடை வெய்துமால். தேசத் துள்ள இளைஞர் அறிமினோ! அறமொன் றேதரும் மெய்யின்பம்;ஆதலால் அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால் வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான் மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய தெய்வ மேயிது நீதி யெனினும்நின் திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ? ஐய கோ!சிறி துண்மை விளங்குமன், ஆவி நையத் துயருறல் வேண்டுமே! பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல் பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால். தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது; தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்; சிந்தை யில்தெளி வில்லை; உடலினில் திறனு மில்லை;உரனுளத் தில்லையால்; மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின் றதாம் மடமைக் கல்வியில் மண்ணும்பயனிலை. எந்த மாக்கமும் தோற்றில தென்செய்கேன்? ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே? முடிவுரை உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்;இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா! ஞான முந்துற வும்பெற் றிலாதவர் நானி லத்தத துயரன்றிக் காண்கிலர்; போன தற்கு வருந்திலன் மெய்த்தவப் புலமை யோனது வானத் தொளிருமோர் மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை வீச லொக்கு மெனலை மறக்கிலேன்; ஆன தாவ தனைத்தையுஞ் செய்வதோர் அன்னை யே! இனி யேனும் அருள்வையால். வேறு அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியர சாணை, பொழுதெலாம் நினது பே ரருளின் நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய், குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே! |