3. தனிப் பாடல்கள் | |
25. மது | |
போகி பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே இச்சை தீர மதுவடித் துண்போம்; இஃது தீதென் றிடையர்கள் சொல்லும் கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்; கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும் இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ? இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? யோகி பச்சை முந்திரி யன்ன துலகம்; பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்; இச்சை தீர உலகினைக் கொல்வோம்; இனிய சாறு சிவமதை உண்போம்; கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ? கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி இச்சகத்தில் இவையின்ப மன்றோ? இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? போகி வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்; சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை தோளின் மீதுருப் பெண்கள் குலாவச் சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித் தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். யோகி வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்; வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்; ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம் உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்; மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்; வண்ம லர்நறு மாலை தெளிவாம்! சுற்றி மார்பில் அருள்மது வுண்டே தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். போகி நல்ல கீதத் தொழிலுணர் பாணர் நடனம் வல்ல நகைமுக மாதர் அல்லல் போக இருடன் கூடி ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்; சொல்ல நாவு கனியுத டாநற் சுதியிலொத்துத் துணையொடும் பாடி புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும் போகம் போலொரு போகமிங் குண்டோ? யோகி நல்ல கீதம்,சிவத்தனி நாதம், நடன ஞானியர் சிற்கபை யாட்டம்; அல்லல் போக இவருடன் சேர்ந்தே ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்; சொல்ல நாவில் இனிக்கு தடா!வான் சுழலும் அண்டத் திரளின் சுதியில் செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும் செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? ஞானி மாத ரோடு மயங்கிக் களித்தும் மதுர நல்லிசை பாடிக் குதித்தும் காதல் செய்தும் பெறும்பல இன்பம், களில் இன்பம் கலைகளில் இன்பம், பூத லத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம் யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம் இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே இச்ச கத்தின் இயல்வலி யாகி முன்பு பின்பல தாகியெந் நாளும் மூண்டு செல்லும் பராசக்தி யோட அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத் தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார், துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார் துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. இச்சகத்தோர் பொருளையுந் தீரர் இல்லை யென்று வருந்துவதில்லை; நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு நானிலத்தின்பம் நாடுவதில்லை; பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில் பித்துக் கொண்டு மயங்குவ தில்லை; துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச் சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை. தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்; மாதர் இன்பம் முதலிய வெல்லாம் வைய கத்துச் சிவன் வைத்த வென்றே ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்; அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்; யாது மெங்கள் சிவன்திருக் கேளி; இன்பம் யாவும் அவனுடை இன்பம். வேத மந்திர நாதம் ஒருபால் வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால், காதல் மாதரொ டாடல் ஒருபால், களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால், போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால், பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்; ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும் எங்கள் தாய்அருட் பாலது வன்றே. சங்கீர்த்தனம் மூவரும் சேர்ந்து பாடுதல் மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம், மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்; மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன், மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம், மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம், மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை; மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும் மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால். | |
ADVERTISEMENTS
| |
ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதிபச்சைக் குழந்தை யடி!-கண்ணிற் பாவை யடி சந்திரமதி! இச்சைக் கினிய மது!;-என்தன் இருவிழிக்குத் தே நிலவு; நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல நாகமணி யுள்ளதென்பார்; துச்சப்படு நெஞ்சி லே-நின்தன் சோதி வளரு தடீ! பேச்சுக் கிடமே தடி!-நீ பெண்குலத்தின் வெற்றி யடி! ஆச்சர்ய மாயை யடி!-என்தன் ஆசைக் குமாரி யடி! நீச்சு நிலை கடந்த-வெள்ள நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல், தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட தேவி!நினை விழந்தேனடி! நீலக் கடலினிலே-நின்தன் நீண்ட குழல் தோன்றுதடி! கோல மதியினி லே-நின்தன் குளிர்ந்த முகங் காணுதடி! ஞால வெளியினி லே-நின்தன் ஞான வொளி வீசுதடி! கால நடையினி லே-நின்தன் காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தை யடி!) | |
என்றும் இருக்க உளங்கொண்டாய்! இன்பத் தமிழுக் கிலக்கியமாய், இன்றும் இருத்தல் செய்கின்றாய்! இறவாய் தமிழோ டிருப்பாய் நீ! ஒன்று பொருள ஃதின்பமென உணர்ந்தாய், தாயு மானவனே! நின்ற பரத்து மாத்திரமோ? நில்லா இகத்தும் நிற்பாய் நீ! | |
ADVERTISEMENTS
| |
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன். | |
சுருதியும் அரிய உபநிட தத்ன் தொகுதியும் பழுதற உணர்ந்தோன். கருதிடற் கரிய பிரமநன் னிலையைக் கண்டுபே ரொளியிடைக் களித்தோன், அரிதினிற் காணும் இயல்பொடு புவியின் அப்புறத் திருந்துநண் பகலில் பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்றோன். வேறு ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம் அதன்வடிவாம்,ஓருங்காலை; என்தேவன் உன்தேவன் என்றுலகர் பகைப்பதெலாம் இழிவாம் என்று, நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு ஞானமெனும் பயிரை நச்சித் தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும் விலங்கின த்தைச் செகுத்த வீரன். வேறு வானந் தம்புகழ் மேவி விளங்கிய மாசி லாதி குரவணச் சங்கரன் ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும் நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே- கானந் தபெருஞ் சோதி மறைந்தபின் அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம் ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். வேறு தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண் டொளிர்தருமிச் சுத்த ஞானி, நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ் சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு, மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன் னெறிசாரும் வண்ணம் ஞானம் தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான் இவன்பதங்கள் துதிக்கின் றோமே | |
ADVERTISEMENTS
| |
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப் பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை; இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம் இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன் அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான் நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள் பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்? அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும், சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின் ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? |