72. வெண்ணிலாவே! | |
எல்லை யில்லாததோர் வானக் கடலிடை வெண்ணிலாவே!-விழிக் கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை வெண்ணிலாவே! சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு வெண்ணிலாவே!-நின்தன் சோதி மயக்கும் வகையது தானென்சொல் வெண்ணிலாவே! நல்ல ஒளியின் வகைபல கண்டிலன் வெண்ணிலாவே!-(இந்த) நனவை மறந்திடச் செய்வது கண்டிலன் வெண்ணிலாவே! கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று வெண்ணிலாவே!-வந்து கூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு வெண்ணிலாவே! மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் வெண்ணிலாவே!-அஃது வயதிற் கவலையின் நோவிற் கெடுவது வெண்ணிலாவே! காதலொருத்தி இளைய பிராயத்தள் வெண்ணிலாவே!-அந்தக் காமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள் வெண்ணிலாவே! மீதெழும் அன்பின் விளையபுன் னகையினள் வெண்ணிலாவே!-முத்தம் வேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்கு வெண்ணிலாவே! சாதல் அழிதல் இலாது நிரந்தரம் வெண்ணிலாவே!-நின் தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்? வெண்ணிலாவே! நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு வெண்ணிலாவே!-நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே! மன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே!-அந்த மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே! துன்னிய நீல நிறத்தள் பராசக்தி வெண்ணிலாவே!-இங்கு தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர் வெண்ணிலாவே! பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும் வெண்ணிலாவே!-(நல்ல) பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன் வெண்ணிலாவே! காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர் வெண்ணிலாவே!-நினைக் காதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவை வெண்ணிலாவே! சீத மணிநெடு வானக் குளத்திடை வெண்ணிலாவே!-நீ தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை வெண்ணிலாவே! மோத வருங்கரு மேகத் திரளினை வெண்ணிலாவே!-நீ முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை வெண்ணிலாவே! தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே!-நலஞ் செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ? வெண்ணிலாவே! மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும் வெண்ணிலாவே!-உன்தன் மேனி யழகு மிகைபடக் காணுது வெண்ணிலாவே! நல்லிய லார்யவ னத்தியர் மேனியை வெண்ணிலாவே!-மூடு நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும் வெண்ணிலாவே! சொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலும வெண்ணிலாவே!-நின் சோதி வதனம் முழுதும் மறைத்தனை வெண்ணிலாவே! புல்லின் செய்த பிழைபொறுத் தேயருள் வெண்ணிலாவே! போகிடச் செய்து நினதெழில் காட்டுதி வெண்ணிலாவே! | |
ADVERTISEMENTS
| |
ராகம்-புன்னாகவராளி பல்லவி தீ வளர்த்திடுவோம்!-பெருந் தீ வளர்த்திடுவோம்! சரணங்கள் ஆவியி னுள்ளம் அறிவி னிடையிலும் அன்பை வளர்த்திடுவோம்-விண்ணின் ஆசை வளர்த்திடுவோம்-களி ஆவல் வளர்த்திடுவோம்-ஒரு தேவி மகனைத் திறமைக் கடவுளைச் செங்கதிர் வானவனை -விண்ணோர் தமைத் தேனுக் கழைப்பவனைப்-பெருந்திரள் சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத் தீமை யழிப்பவனை-நன்மை சேர்த்துக் கொடுப்பவனைப்-பல சீர்க ளுடையவனைப்-புவி அத்தனையுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும் ஆரியர் நாயகனை-உருத்திரன் அன்புத் திருமகனை-பெருந்திர ளாகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங் கண்மணி போன்றவனை-எம்மைக் காவல் புரிபவனைத்-தொல்லைக் காட்டை யழிப்பவனைத்-திசை எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள் யாவும் பழகிடவே-புவிமிசை இன்பம் பெருகிடவே-பெருந்திரள் எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும் நீக்கிக் கொடுப்பவனை-உயிர் நீளத் தருபவனை-ஒளிர் நேர்மைப் பெருங்கனலை-நித்தம் அஞ்ச லங்சேலென்று கூறி எமக்குநல் ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள் ஆக்கிக் கொடுப்பவனைப்-பெருந்திரள் ஆகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) அச்சதைச் சுட்டங்கு சாம்பரு மின்றி அழித்திடும் வானவனைச்-செய்கை ஆற்று மதிச் சுடரைத்-தடை யற்ற பெருந்திறலை-எம்முள் இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும் ஏற்றதொர் நல்லறமும்-கலந்தொளி ஏறுந் தவக்கனலைப்-பெருந்திரள் எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று மண்டி யெழுந்தழலைக்-கவி வாணர்க்கு நல்லமுதைத்-தொழில் வண்ணந் தெரிந்தவனை-நல்ல தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும் தீம்பழம் யாவினையும்-இங்கேயுண்டு தேக்கிக் களிப்பவனைப்-பெருந்திரள் சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள் தேவத் திருமகளிர்-இன்பந் தேக்கிடுந் தேனிசைகள்-சுவை தேறிடு நல்லிளமை-நல்ல முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த முழுக்குடம் பற்பலவும்-இங்கேதர முற்பட்ட நிற்பவனைப்-பெருந்திரள் மொய்த்துப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) | |
ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம் ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ!தீ!-இந்நேரம், பங்க முற்றே பேய்க ளோடப் பாயுதே தீ!தீ!-இந்நேரம் அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச் சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம் வாழ வந்த காடு வேக வந்ததே தீ!தீ!-அம்மாவோ! ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான் போந்து விட்டானே!-இந்நேரம், சின்ன மாகிப் பொய் யரக்கர் சிந்தி வீழ்வாரே!-இந்நேரம் அசு: இந்திராதி தேவர் தம்மை ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம், வெந்து போக மானிடர்க்கோர் வேத முண்டாமோ!-அம்மாவோ! ரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ!தீ!-இந்நேரம், ஞான மேனி உதய கன்னி நண்ணி விட்டாளே!-இந்நேரம். அசு: கோடி நாளாய் இவ்வனத்திற் கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம் பாடி வேள்வி மாந்தர் செய்யப் பண்பிழந் தோமே!-அம்மாவோ! ரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான் காணுவீர் தீ!தீ!-இந்நேரம், ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம் வாட்டுகின்றானே!-இந்நேரம். அசு:வலியி லாதார் மாந்த ரென்று மகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம் கலியை வென்றோர் வேத வுண்மை கண்டு கொண்டாரே!-அம்மாவோ! ரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன் வாய்திறந் தானே!-இந்நேரம், மலியு நெய்யுந் தேனுமுண்டு மகிழ வந்தானே!-இந்நேரம். அசு: உயிரை விட்டும் உணவை விட்டும் ஓடி வந்தோமே!-ஐயோ!நாம் துயிலுடம்பின் மீதிலுந் தீ தோன்றி விட்டானே!-அம்மாவோ! ரிஷி: அமரர் தூதன் சமர நாதன் ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம், குமரி மைந்தன் எமது வாழ்விற் கோயில் கொண்டானே!-இந்நேரம். அசு: வருணன் மித்ரன் அர்ய மானும் மதுவை யுண்பாரே-ஐயோ!நாம் பெருகு தீயின் புகையும் வெப்பும் பின்னி மாய்வோமே!-அம்மாவோ! ரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன் அவிகள் கொண்டாரே!-இந்நேரம், நமனு மில்லை பகையு மில்லை நன்மை கண்டோமே!-இந்நேரம். அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப் பாடுகின்றானே-ஐயோ!நாம் புகையில் வீழ இந்திரன் சீர் பொங்கல் கண்டீரோ!-அம்மாவோ! ரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள் இரவி வந்தானே!இந்நேரம், விளையுமெங்கள் தீயினாலே மேன்மையுற்றோமே!-இந்நேரம். ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும் அமுது முண்பீரே!-இந்நேரம், மின்னி நின்றீர் தேவ ரெங்கள் வேள்வி கொள்வீரே!-இந்நேரம். ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும் ஜோதி பெற்றோமே!-இந்நேரம், தீமை தீர்ந்தே வாழி யின்பஞ் சேர்ந்து விட்டோமே!-இந்நேரம். ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீ ஓங்கி விட்டானே!-இந்நேரம், கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக் கை கொடுத்தாரே!-இந்நேரம். ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும் யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம், தங்கு மின்பம் அமர வாழ்க்கை சார்ந்து நின்றோமே!-இந்நேரம். ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி! மாந்தர் வாழ்வாரே!-இந்நேரம், வாழ்க வையம்! வாழ்க வேதம்! வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம். | |
ADVERTISEMENTS
| |
திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி! வெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்று, கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ? துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம், அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண். ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று, ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ! தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை நேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ? | |
“ஈசன் வந்து லுவையில் மாண்டான், எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்; நேசமா மரியா மக்த லேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்; தேசத் தீர்!இதன் உட்பொருள் கேளீர்; தேவர் வந்து நமக்குட் புகுந்தே நாச மின்றி நமை நித்தங் காப்பார்; நம்அ கந்தையை நாம்கொன்று விட்டால். அன்புகாண் மரியா மக்த லேநா, ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து; முன்பு தீமை வடிவினைக் கொன்றால் மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்; பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே போற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை; அன்பெனும் மரியா மக்த லேநா ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. உண்மை யென்ற சிலுவையிற் கட்டி உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால், வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும்; பெண்மைகாண் மரியா மக்த லேநா, பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து; நுண்மை கொண்ட பொருளிது கண்டீர் நொடியி லிஃத பயின்றிட லாகும். | |
ADVERTISEMENTS
| |
பல்லவி அல்லா,அல்லா,அல்லா! சரணங்கள் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள் எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே! நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி! (அல்லா,அல்லா,அல்லா!) கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும் பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும் நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும் எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன் (அல்லா,அல்லா,அல்லா!) |