பல்வகைப் பாடல்கள்

1. நீதி

1.புதிய ஆத்திசூடி காப்பு
பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.
ADVERTISEMENTS
ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!

பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்ப!

வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.

வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.

ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.

சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.

தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.

வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?

தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
ADVERTISEMENTS
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!

மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!

அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;

போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.

பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்,ஆடு களிகொண்டே

‘போற்றி தாய்’ என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே

அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.
ADVERTISEMENTS
காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். (கும்மி)

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)

நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி)

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி! (கும்மி)

வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம். (கும்மி)

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி! (கும்மி)